தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து, இவர்கள் நேற்று காலை திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஆசாத்ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்த போது, பஞ்சாலைக்கு சொந்தமான ஒரு பேருந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இதைப்பார்த்த சக பாதையாத்திரை பக்தர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் வருவதற்கு காலதாமதமானதால் ஆத்திரம் அடைந்த பாதயாத்திரை பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதைத்தொடர்ந்து, போலீசார் பல மணி நேரங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர், போலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.