த்ஸ்ரீவில்லிபுத்தூரில் முதியவர் ஒருவரை, இளைஞர்கள் இரண்டு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). இவருக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்திவந்த மாரிமுத்துவுக்கு, நிரந்தர இடம் இல்லை எனத் தெரிகிறது. தினசரி கடை வாசல்களிலும், பொது இடங்களிலும் தங்கி வேலைக்குச் சென்றுவந்திருக்கிறார். இன்று கூனங்குளம் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் நோக்கிச் சென்றிருக்கிறார். அப்போது, முதியவர் மாரிமுத்துவை எதிர்பார்த்து காத்திருந்த இளைஞர்கள் இரண்டு பேர், அவரிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து ஆத்திரமடைந்த அவர்கள், முதியவரை அடித்தும், காலால் எட்டி உதைத்தும் கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இளைஞர்கள் அடிப்பதை தாங்க முடியாத மாரிமுத்து, கீழே விழுந்து மயக்கநிலைக்குச் சென்றிருக்கிறார். இதனால் பதறிய இளைஞர்கள் அவரை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் மாரிமுத்துவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து முதியவர் மாரிமுத்துவின் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தினோம். மேலும் அருகிலிருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்ததில், முதியவரை அடித்துக் கொன்ற வீடியோ காட்சிகள் கிடைத்தன. அதை ஆதாரமாகக் கொண்டு கொலையாளிகளைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டோம்.


அதன் பயனாக, தப்பிச் சென்ற இரண்டு வாலிபர்களும் எங்களிடம் சிக்கிக்கொண்டனர். பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பேச்சிமுத்து, சித்து ஆகியோர் என்பது தெரியவந்தது. முதியவரை அடித்துக் கொலை செய்ததற்கான காரணம் கேட்கையில், `கடந்த தீபாவளியன்று எங்களது செல்போனை மாரிமுத்து திருடிவிட்டார். அந்த ஆத்திரத்தில் அவரை அடித்தோம். மதுபோதையில் இருந்ததால் அவர் இறந்ததுகூட எங்களுக்குத் தெரியாது’ என வாக்குமூலம் அளித்தனர். அதையடுத்து அவர்கள் இருவரையும் கைதுசெய்தோம்” என்றனர்.