அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.2.79 லட்சம் கோடியில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ராஜேந்திரநாத் இதனை தாக்கல் செய்தார்.
முன்னதாக அமைச்சர் பேசும்போது, ஆந்திராவில் 62% பேர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். எனவே விவசாயிகளின் ஆதாயத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த அரசு சிந்தித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாட்டில் முதலிடத்தில் ஆந்திரா உள்ளது. இறைச்சி உற்பத்தியில் 2-வது இடத்திலும் பால் உற்பத்தியில் 5-வது இடத்திலும் நாம் உள்ளோம். மாநிலத்தில் 340 மொபைல் கால்நடை ஊர்திகள் உள்ளன” என்றார்.
இந்த பட்ஜெட்டில் ஒய்எஸ்ஆர் பென்ஷன் திட்டத்திற்கு ரூ.21,434.72 கோடி, விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.4,020 கோடி, மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் செலுத்த ரூ.2,814 கோடி, பீமா யோஜனா திட்டத்திற்கு ரூ.1,600 கோடி, மகளிர் சுய உதவி குழுவினருக்கு வட்டியில்லா கடனுக்கு ரூ.1,000 கோடி, விவசாயிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடனுக்கு ரூ.500 கோடி என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.