ஓபிஎஸ் திருச்சி முப்பெரும் விழா ஏற்பாடுகள் எப்படி? தெற்கில் அரசியல் பல்ஸ்… அடுத்த மெகா பிளான் இதுதானாம்!

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்ன? இந்த கேள்வி பலரின் எண்ண ஓட்டங்களில் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் கடைசி நம்பிக்கையாக இருந்த தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து விட்டது. அதேசமயம் இந்த விவகாரம் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உட்பட்டது என குறிப்பிட்டுள்ளது. எனவே நீதிமன்றம் தான் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

விரைவில் உண்மைதன்மையை விளக்கும் சுற்றுப்பயணம் – ஓபிஎஸ் பேட்டி

திட்டம்

அதேசமயம் நிரந்தர தீர்வு என்பது மக்களிடத்திலும், கழக தொண்டர்களிடமும் தான் இருக்கிறது என்பதை ஓ.பன்னீர்செல்வம் நன்கு உணர்ந்துள்ளார். தனக்கு தொண்டர்கள் ஆதரவு எந்த அளவிற்கு இருக்கிறது ஒருமுறை காண்பித்து விட்டால் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனக் கருதுகிறார். எம்.ஜி.ஆர் வகுத்த அடிப்படை விதி என்பது அடிமட்ட தொண்டர்கள் தான் கழக தலைமை பதவிக்கு வருபவரை தேர்வு செய்ய வேண்டும். இதை ஜெயலலிதா அவர்களும் மாற்றவில்லை.

திருச்சியில் முப்பெரும் விழா

இத்தகைய பெருமை வாய்ந்த இயக்கம் ஒரு சிலரின் கைகளில் சிக்கி தவித்து கொண்டிருப்பதை கழகத்தினர் ஏற்க மாட்டார்கள். இதற்காக மக்கள் மன்றத்தின் தீர்ப்பை நோக்கி செல்ல ஓ.பன்னீர்செல்வம் விரும்புகிறார். இதையொட்டி திருச்சியில் வரும் 24ஆம் தேதி முப்பெரும் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். எம்.ஜி.ஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்த நாள், கழகத்தின் பொன் விழா என முப்பெரும் விழாவை திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

வைத்திலிங்கம் ஏற்பாடு

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் முதல் மாநாடு என்பதால் பெரிய அளவில் பேசுபொருளாக மாற வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை வைத்திலிங்கம் முன்னின்று செய்து வருகிறார். திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆதரவாளர்களை திரட்டி கொண்டு வர திட்டம் வகுத்துள்ளனர்.

முக்குலத்தோர் ஆதரவு

தெற்கில் தான் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது முப்பெரும் விழாவில் தெரிந்துவிடும். திருச்சியில் விழா நடைபெறும் இடத்தில் விரிவான ஏற்பாடுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் கணிப்பின் படி சுமார் 3 லட்சம் பேர் முப்பெரும் விழாவிற்கு வருகை புரியக் கூடும் எனத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு செக்

இந்த விழாவில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழக விதிகளை மாற்றியது செல்லாது என்றும்,

தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை கழகத்தின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் ஓபிஎஸ் சுட்டிக் காட்டி பேசவுள்ளார். அடுத்தகட்டமாக இரண்டு மாநாடுகளை நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு பெற்று விளங்கும் கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டம் என அடுத்தடுத்து இரண்டு மாநாடுகளை நடத்தி தனது செல்வாக்கை நிரூபிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.