பிரபல ஜவுளிக்கடை டிரயல் ரூமில் ரகசிய கேமரா? அதிர்ந்த வாடிக்கையாளர்கள்.. பரபரத்த திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஜவுளிக் கடையில் பெண்கள் உடைமாற்றும் டிரெயல் ரூமில் ரகசிய கேமரா இருந்ததை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்த விவரத்தை பார்க்கலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பிரபலமான ஜவுளிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் இருக்கும். விடுமுறை தினம் என்பதால் நேற்று வழக்கம் போல துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் பெண் ஒருவர் துணி எடுப்பதற்காக கடைக்கு வந்து இருந்தார்.

தனக்கு பிடித்தமான துணிகளை தேர்வு செய்து விட்டு அளவு சரியாக இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள டிரெயல் ரூம் சென்றுள்ளார். புது துணியை போட்டு பார்த்து முடித்த பிறகு கதவை திறது கொண்டு வெளியே வர முயற்சித்தார். அப்போது மேல் பகுதியில் கண்ணாடி ஒன்று இருந்ததை திறந்து பார்த்தார். இதைப்பார்த்ததும் டிரெயல் ரூமில் தேவையில்லாமல் மேல் பகுதியில் கண்ணாடி ஏன் இருக்கிறது என்று பார்த்து விட்டு சந்தேகம் அடைந்த அந்த பெண் கையால் தட்டி பார்த்துள்ளார்.

அப்போது செல்போன் ஒன்று கீழே விழுந்தது. உடனே டிரெயில் ரூமிற்கு வெளியே நின்று கொண்டிருந்த பெண் ஓடி சென்று அந்த செல்போன் மற்றும் சிம்கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டார். இதையெல்லாம் பார்த்த உடைமாற்ற சென்ற பெண்ணுக்கு டிரெயல் ரூமில் செல்போன் ரகசிய கேமராவை வைத்து உடைமாற்றுவதை பதிவு செய்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைபார்த்த கடை நிர்வாகத்தினர் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழம்பி போகினர். தொடர்ந்து அந்த பெண் நடந்த சம்பவத்தை கூறி கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, திருக்கோவிலூர் போலீசாரும் கடைக்கு உடனடியாக வருகை தந்தனர்.

அங்கு செல்போனை எடுத்த பெண்ணிடம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் செல்போனை ஓடி சென்று எடுத்த பெண், கடந்த இரு தினங்களுக்கு முன்பே கடைக்கு வந்து சென்றது தெரியவந்தது.

எனவே, அந்த பெண் திட்டமிட்டு செல்போன் கேமராவை பெண்கள் டிரெயில் ரூமிற்குள் வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். உடை மாற்றும் பெண்களை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் இப்படி செயல்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்தில் இதுபோல செயல்பட்டாரா? என அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.