தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்க கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்சினையை தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு சமீபத்தில் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலையை ஏற்படுத்திவரும் நிலையில், ஏமாற்ற உணர்வுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

இலங்கை அதிபர் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்தபோது, முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினை குறித்து பிரதமர் விவாதிக்க வலியுறுத்தி இருந்தேன். மீனவர் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், இந்திய, இலங்கை மீனவர்களின் உரிமைகள், வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கும் இலங்கை அதிபர் உடனான சந்திப்பு வழிவகுக்கும் என நம்பினேன்.

இந்தியா – இலங்கை இடையே உயர்நிலை பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்கிறது. தமிழகத்தை சேர்ந்த 9 மீனவர்களும், 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

கைது, படகு பறிமுதல் நடவடிக்கைகளால் மீனவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடுமையான சமூக பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிரந்தர தீர்வு காண்பதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். இதுதொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.