புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே இளங்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரகோபாலன்(57). இவர் தேக்காட்டூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்தவர். இவரின் மனைவி முத்து, தற்போது தேக்காட்டூர் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் தான், சுந்தரகோபாலன் இளங்குடிப்பட்டி அய்யனார் கோயில் அருகே சுவாமி கும்பிடுவதற்காக டூவிலரில் சென்றுள்ளார். அவருடன் உறவினர் ஒருவரும் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், சுந்தரகோபாலனை மட்டும் சுற்றி வளைத்து கண் இமைக்கும் நேரத்திற்குள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், தலை, கை, கால், வயிறு உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களிலும் சரமாரியாக வெட்டி தப்பி ஒடி விட்டனர்.

இதில், படுகாயமடைந்த சுந்தரகோபாலன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பாபு என்பவர் நடந்ததைக் கூற, சம்பவ இடத்திற்கு வந்த நமணசமுத்திரம் போலீஸார் மற்றும் மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
இதற்கிடையே சுந்தரசோழனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலரிடம் சுந்தரகோபாலனுக்கு பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை காரணமா அல்லது தேர்தல் முன்விரோதம் ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.