பணி பாதுகாப்பு, மகிழ்ச்சி… உலகளாவிய தரவரிசையில் எந்த இடத்தில் இந்தியா…? ஆய்வில் தகவல்

நியூயார்க்,

வேலை செய்யும் இடத்தில் பணியாளர்களின் உடல், மனம், சமூகம் மற்றும் ஆன்மீகம் உள்ளிட்ட விசயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களின் நலனுக்கான உலகளாவிய தரவரிசை முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதற்காக மெக்கன்சி சுகாதார மையம் சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க நாடுகள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டன. மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வின் முடிவில், 25 சதவீதத்துடன் கடைசி இடத்தில் ஜப்பான் இடம் பெற்றுள்ளது. கடைசி 5 இடங்களுக்கான வரிசையில், ஜப்பானுக்கு அடுத்து இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த பட்டியலில் 78% பெற்ற துருக்கி நாடு முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து 76% பெற்ற இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து, சீனா 75% பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது.

தொடர்ந்து நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகள் முறையே 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளன. இதன் உலகளாவிய சராசரி 57% என்ற அளவில் உள்ளது.

ஜப்பானில், வாழ்நாள் முழுமைக்கான வேலைவாய்ப்பு மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதில் ஒரு நன்மதிப்பை அந்நாடு கட்டமைத்தபோதிலும், மகிழ்ச்சியாக இல்லையென்றால் வேலைகளை மாற்றி கொள்வது என்பது பணியாளர்களுக்கு கடினம்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ரோச்சல் காப், ஜப்பானில் பணியிடத்தில் திருப்திக்கான பற்றாக்குறை, மனஅழுத்த அளவு அதிகரிப்பு போன்ற விசயங்களும் காணப்படுகின்றன என்று கூறுகிறார். இதனால், பணியிடங்களில் பன்முக தன்மை கொண்ட கலாசாரம் மற்றும் வர்த்தக நடைமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தலும் வழங்குகிறார்.

ஜப்பானில், குறுகியகால ஒப்பந்த பணியாளர்களாகவும் பலர் இருப்பது நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது என காப் கூறுகிறார்.

பெருமளவிலான பணியாளர்கள் இரவில் வேலை செய்து விட்டு செல்கின்றனர். இதனால், பணியாளர்களின் உடல், மனம், சமூகம் மற்றும் ஆன்மீக நலம் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு, வேலை வழங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது என்றும் காப் தெரிவித்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.