2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்ததாக, 2011 வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததோடு, இருவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் அபாரதமும் விதித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதனால், தனது அமைச்சர் பதவியை இழந்து இருக்கிறார் பொன்முடி.

`புதிதாக யாரையும் அமைச்சரவைக்குள் இணைக்க வேண்டாம். ஏற்கனவே அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கலாம்’ என்ற திமுக தலைமையின் முடிவின்படி, பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வித்துறை முன் அனுபவம் இல்லாத ராஜகண்ணப்பன் முன்னிருக்கும் சவால்கள் குறித்து விசாரித்தோம்.
இதுகுறித்து உயர்கல்வித்துறையின் சீனியர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த கால கட்டங்களை விட தற்போது உயர்கல்வித்துறை சூழல் முற்றிலுமாக மாறிவிட்டது. தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்த நாளில் இருந்து, உயர்கல்வித்துறையில் பல குழப்பங்கள் நிலவுகிறது. ஆளுநர் நேரடியாக களமாடும் துறை உயர்கல்வித்துறை. அதுமட்டுமல்லாது, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் (ஏ.ஐ.சி.டி.இ) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் தலையீடு அதிகமாக இருக்கிறது.

பொன்முடி பல பிரிவுகளில் முதுநிலை பட்டமும், முனைவர் பட்டம் பெற்றவர். கொள்கை பிடிப்பு இருந்ததால்தான், மாநில கல்வி கொள்கை என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்ததால் பல்கலைக்கழக அளவில் உள்ள அரசியல் அவருக்கு நன்றாகவே தெரியும். துணை வேந்தர்களின் நுணுக்க அரசியலையும் தெரிந்து வந்திருந்தார். அதன்காரணமாகதான், ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தும்போது, போட்டி மாநாடு நடத்தினார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவையும் அறிமுகம் செய்தார். உண்மையை சொல்லபோனால், பொன்முடியாலேயே மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையிட்டை வெற்றி கரமாக எதிர்கொள்வதில் பல்வேறு சிக்கல் இருந்தது. இந்த இரண்டரை ஆண்டுக்கால அனுபவத்தில் மேலிட அழுத்தத்தைதான் சமாளித்துக் கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆனால், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, பொன்முடியைபோல உயர்கல்வித்துறையில் முன் அனுபவமோ, அதை முழுமையாக தெரிந்துக் கொள்ள கால அவகாசமோ இல்லை. மத்திய அரசு மற்றும் ஆளுநரின் தலையீட்டை இந்நாள் முதலாகவே சமாளிக்கவேண்டும். குறிப்பாக, பல்க்கலைக்கழக துணை வேந்தர்களையும் சமாளித்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல் நிர்வாக ரீதியில் உயர்கல்வித்துறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. முதலாவது பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 425 என ஒட்டுமொத்தமாக 13 பல்கலைக்கழகங்களில் 1,265-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.
மேலும், அரசு கல்லூரிகளில் 4000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருக்கிறது. இதை சமாளிக்க கவுரவ விரிவுரையாளர்களும், ஒப்பந்த அடிப்படையிலும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதுவும் ராஜகண்ணப்பனுக்கு பெரிய தலைவலியாக அமையும்.” என்றனர் விரிவாக.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றபோது ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துத் துறையை ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின். துறையில் ஏற்பட்ட குழப்பம், அமைச்சர் மீதான புகார்கள் கட்டுக்கடங்காமல் ஏகிறவே, ராஜகண்ணப்பன் துறையில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார். அரசு அதிகாரி ஒருவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகாரும் இருக்கிறது. இந்நிலையில்தான், தமிழ்நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற பெரிய பொறுப்பு ராஜகண்ணப்பன் கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஆளுநரையும் அவரது அரசியல் கணைகளையும் எதிர்கொள்ளவேண்டும். ராஜகண்னப்பனுக்கு கிடைத்திருக்கும் இந்த கூடுதல் பொறுப்பு ஒரு மூள் கிரிடம்தான். அதை ஏற்று சமாளிப்பாரா ராஜகண்ணப்பன்? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.