இலங்கையில், விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு…
01. விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்
புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்ப ரீதியான புத்தாக்கம் மற்றும் நிலைபெறுதகு அபிவிருத்தி போன்ற தீர்மானம் மிக்க துறைகளில் தலைமைத்துவம் வகிக்கக்கூடிய தொழில் வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில் ஐக்கிய அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொண்டு விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான தேவை கண்டறிப்பட்டுள்ளது.
அவ்வாறான பல்கலைக்கழகத்தின் மூலம் அதிநவீன முறைகளைப் பயன்படுத்துவதற்கும், உலகளாவிய கற்கைகள் தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான அடிப்படைச் சூழலை உருவாக்குவதற்கான இயலுமை கிடைக்கும். UC Berkeley, UC Riverside, UC Davis University of Michigan போன்ற பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அடையாளங் காணப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு பங்காண்மை பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்து, குறித்த பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்து அரச தனியார் பங்குடமையாக மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விஞ்ஞான தொழிநுட்பவியல் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.