2வது டெஸ்ட்டில் இந்திய அணியின் ஃப்ளேயிங் XI: படிதார் அல்லது சர்ஃபராஸ் கான்? சிராஜ் இடத்தில் வாஷிங்டன்?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தக்க பதிலடி கொடுக்க வியூகம் வகுத்துள்ளது. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான புனேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி, அடுத்த போட்டியில் பெங்களூரில் சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்தது. 2020 ஆம் ஆண்டுஅடிலெய்டு டெஸ்டில் வெறும் 36 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி படுதோல்வியை சந்தித்தபோது, அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதேபோன்றதொரு ஆட்டத்தை இங்கிலாதுக்கு எதிரான நடப்பு தொடரிலும் இந்திய அணி காட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. 

ஆனால் எங்கு தவறு நடக்கிறது என்பதை கட்டாயம் இந்திய அணி அறிந்திருக்க வேண்டும். முதல் டெஸ்டில் பேட்டிங் தான் இந்திய அணியை தோல்விக்கு வித்திட்டது என்று சொல்லலாம். விராட் கோலி இல்லாதது கண்கூடாக தெரிந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களின் பொறுப்பை உணர்ந்து பேட்டிங் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன. அதனால், ரன் எடுக்க முடியாமல் திணறும் அவர்களுக்கு பதிலாக தற்போது பார்மில் இருக்கும் பிளேயர்களை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வருவது அவசியம். 

அந்தவகையில் பார்க்கும்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என தெரிகிறது. கே.எல். ராகுல் இடத்தில் ரஜத் படிதார் அல்லது சர்பிராஸ் கான் ஆகியோரில் யாரேனும் ஒருவர் களமிறங்குவர். ஜடேஜா காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிவிட்டதால் அவருக்கு பதிலாக குல்தீப் லெவனுக்குள் வருகிறார். ஆனால், ஜடேஜாவின் பேட்டிங் பணியை செய்ய ஒரு பேட்ஸ்மேன் அவசியம் என்பதால் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. 

பந்துவீச்சில் சிறப்பாக இருக்கும் இந்திய அணி, பேட்டிங்கில் ஜொலித்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லலாம். குறைந்தபட்சம் தோல்வியை பெறாமல் டிரா கூட செய்யலாம். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.