RB Choudary: "என் 100வது படத்தில் நீங்கதான் நடிக்கணும்னு சொல்லியிருந்தார்" – ரஜினிகாந்த் இரங்கல்

தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி விபத்தில் சிக்கி அகால மரணமடைந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கியமான பல திரைப்படங்களைத் தயாரித்தவர், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி.

நாட்டாமை, பூவே உனக்காக, ஜில்லா உள்ளிட்ட 99 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்த ஆகப்பெரும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

R B Choudary
R B Choudary

கடந்த செவ்வாய்கிழமை மதியம் 3 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர் சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியிருக்கிறது.

இந்த விபத்தில் இவருக்குப் படுகாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிறகு, இவருடைய உயிரும் பிரிந்திருக்கிறது.

நேற்று, இவருடைய உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக இவருடைய உடல், மயிலாப்பூரிலுள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்.

அவர், “ஆர்.பி. சௌத்ரியோடு நான் படம் பண்ணியதில்லை. ஆனாலும், எனக்கு அவர் ஒரு நெருங்கிய நண்பர். நிறைய முறை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.

நான்கு மாதங்களுக்கு முன்புகூட, ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது என்னைச் சந்திக்க வந்திருந்தார்.

’99 படங்கள் எடுத்துவிட்டேன். 100-வது படத்தை எடுத்து முடித்துவிட்டு ஓய்வு பெறப்போகிறேன். அந்த 100-வது படத்தை நீங்கள்தான் செய்ய வேண்டும். மூன்று கதாசிரியர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டுவிட்டு கண்டிப்பாகச் செய்ய வேண்டும்’ என்று கேட்டிருந்தார். நானும் நூறு சதவீதம் சம்மதம் தெரிவித்திருந்தேன்.

R B Choudary
R B Choudary

இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் என்னிடம் பேசும்போது, ‘ஆர்.பி. சௌத்ரி சார் எத்தனையோ இயக்குநர்களை உருவாக்கியுள்ளார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அவருக்கு ஒரு பெரிய விழா நடத்த வேண்டும்’ என்று சொல்லியிருந்தார்.

எத்தனையோ இயக்குநர்களை உருவாக்கி, இந்தத் திரையுலகைக் காப்பாற்றிய ஒரு மாமனிதர். எத்தனையோ தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேலை கொடுத்தவர் அவர்.

அவர் 99 படங்கள் எடுத்திருந்தாலும், எந்தப் படத்திலும் பெரிய பிரச்னை வந்ததில்லை. அப்படியே பிரச்னைகள் வந்தாலும்கூட, யாரிடமிருந்து பிரச்னை வந்ததோ அவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று பேசி, அங்கேயே பிரச்னையை முடித்துவிட்டு வருவார்.

அந்த அளவிற்கு ஒரு நடைமுறைக்கு உகந்த மனிதர் அவர். எப்போதுமே மிகவும் புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார். இதற்கு என்ன காரணம் என்று நான் அவரிடம் கேட்டபோது, ‘நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

எனது எல்லை என்னவென்று எனக்கு தெரியும். அதற்குள்ளேயே நான் படங்களை எடுப்பேன். படம் எடுத்த பிறகு எல்லாவற்றையும் ஆண்டவனிடம் விட்டுவிடுவேன்.

R B Choudary
R B Choudary

அடுத்தது என்னவென்று நகர்ந்து கொண்டே இருப்பேன். எதைக் கொண்டு வந்தோம், எதைக் கொண்டு போகப்போகிறோம்?’ என்று சொல்லுவார். அப்படிப்பட்ட ஒரு அருமையான ஆத்மா.

இவருடைய இந்த அகால மரணம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.