புதுடெல்லி:
இந்தியாவில் இருந்து ரஷியாவிற்கு சென்ற பரூக் கான் என்ற நபர், போலியான இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தினர். அவர் டெல்லி வந்து இறங்கியதும் அவரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
ரஷியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் பரூக் முல்லா. பரூக் கான் என்ற பெயரில் பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் மாநிலத்தின் சூரத்தில் இருந்து போலியான பாஸ்போர்ட் வாங்கி, அதைப் பயன்படுத்தி டெல்லியில் இருந்து ரஷியா சென்றுள்ளார். நாடு கடத்தப்பட்டு, டெல்லி வந்ததும் அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.