பெரிய தப்பு பண்ணிட்டோம்… பாகிஸ்தான் போட்டிக்கு முன் ரோஹித் – என்ன பிரச்னை?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரில் இந்திய அணியில் (Team India) முதல் போட்டி நேற்று நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, அயர்லாந்து உடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றார். பேட்டிங்கில் ரோஹித் சர்மா (Rohit Sharma) அரைசதம் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார். 

அவருக்கு டாஸில் இருந்தே கை வலிப்பதாக கூறிய நிலையில், பேட்டிங்கில் சிறு அசௌகரியமாக உணர்ந்ததால் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா மாட்டாரா சந்தேகம் கிளம்பிய நிலையில், போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா அதற்கு பதிலளித்தார். 

என்ன எதிர்பார்ப்பது என்றே தெரியவில்லை?

“கொஞ்சம் கையில் வலி இருக்கிறது. அதை டாஸ்ஸிலும் சொன்னேன். ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்ப்பது என்றே தெரியவில்லை. ஐந்து மாதங்களே ஆன ஒரு ஆடுகளத்தில் எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. நாங்கள் இரண்டாவது பேட்டிங் செய்தபோதும் விக்கெட் மாறவேயில்லை, பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து சாதகமாக இருந்தது.

இந்த சூழலில் நான்கு ஸ்பின்னர்களை சேர்த்து விளையாடலாம் என்று நினைக்க முடியாது (சிரிக்கிறார்). நாங்கள் அணியை தேர்வு செய்தபோது, ​​அணி சமநிலையில் இருக்கவே விரும்பினோம். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப சூழல் இருந்தால், நாங்கள் அதனை பயன்படுத்திக்கொள்வோம். பின் நாட்களில் வெஸ்ட் இண்டீஸில் சுழற்பந்துவீச்சு ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.

4 சுழற்பந்துவீச்சாளர்கள்?

இன்று (அதாவது நேற்று) நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடுகளமாக இருந்தது. எங்களால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை ஆல்-ரவுண்டர்களாகப் பெற முடிந்தது. உண்மையாக சொல்லப்போனால் ஆடுகளத்தில் இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. சூழல் இப்படித்தான் இருக்கும்  என்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு நாங்கள் அதற்கேற்ப தயார் செய்வோம். இந்த சூழலில் உங்களின் அனைத்து வீரர்களும் சிறப்பாக பங்களித்தால்தான் வெற்றி பெற இயலும்” என்றார். 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் மும்பையில் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மாவும், அணி தேர்வுக்குழு தலைவர் என்ற முறையில் அஜித் அகர்கரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஏன் 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் செல்கிறீர்கள் என ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அப்போது பதிலளித்த ரோஹித் பொறுத்திருந்து பாருங்கள் என்றார். 

அதாவது, இங்குள்ள சூழல் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்பட்டது. இருப்பினும், குரூப் சுற்றில் முதல் மூன்று போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாட உள்ளதால், நான்கு ஸ்பின்னர்களை தேர்வு செய்தது சற்று தவறான முடிவு என இந்திய அணிக்கு புரிந்துள்ளது. அதில் ஒரு ஸ்பின்னருக்கு பதில் ரின்கு சிங்கை எடுத்திருக்கும்பட்சத்தில் பேட்டிங் வரிசை நீண்டிருக்கும். தற்போதைய சூழலில் குல்தீப் யாதவே வாய்ப்பை பெறுவது கடினம் எனும்போது, சஹாலுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. 

இந்திய அணி வரும் ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தான் அணியை நியூயார்க் நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். அது அமெரிக்க நாட்டின் நேரப்படி மதியம் 2.30 மணியாகும். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சு தாக்குதல் இந்திய அணியை விட பலமாக இருப்பதால் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே அதிமாகிவிட்டது. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.