மாஸ்கோவில் 2-ம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டம் – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பங்கேற்பு

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத், மே 08 முதல் 09 வரை ரஷ்யாவில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றி தின கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றார். இரண்டாம் உலகப் போரில் (1941-45) சோவியத் யூனியன் பெற்ற வெற்றியின் 80-வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2025 மே 09 அன்று மாஸ்கோவில் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்றது.

போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சஞ்சய் சேத், வெற்றி தின அணிவகுப்பை, பிற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இணைந்து பார்வையிட்டார். வெற்றி தின அணிவகுப்பில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பங்கேற்றது இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பின் அடையாளமாக அமைந்தது.

இந்தப் பயணத்தின் போது, ​​இணையமைச்சர் சஞ்சய் சேத் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்து 80-வது வெற்றி தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ரஷ்ய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையையும் அவர் நடத்தினார். எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ரஷ்யா அளிக்கும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இரு அமைச்சர்களும் பன்முக ராணுவ, தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பற்றி விரிவாக விவாதித்தனர். மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில், இந்திய சமூகத்தின் முக்கியப் பிரதிநிதிகளுடனும் சஞ்சய் சேத் கலந்துரையாடினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.