மோடியின் திசைதிருப்பும் பயிற்சி: பஹல்காம் தாக்குதல் சிறப்புக் கூட்டத்தொடர் மீது காங். விமர்சனம்

புதுடெல்லி: அவசரநிலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளில், பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் மோடி அரசின் மற்றுமொரு திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடந்த ஏப்.22-ம் தேதி இரவில் இருந்தே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. அது இன்னும் நடக்கவில்லை.

மே 10-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் இருவரும் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டும், தீர்மானத்தின் வழியாக நாட்டின் கூட்டு உறுதியைக் காட்ட வேண்டும் என்று கோரியிருந்தனர். பிரதமர் அந்தக் கோரிக்கையையும் ஏற்கவில்லை.

இப்போதோ, அவசரநிலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளில், பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக நாட்டை அறிவிக்கப்படாத அவசரநிலையில் வைத்திருக்கிறது பாஜக. பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் இன்னும் தலைமறைவாக இருக்கிறார்கள். அதையெல்லாம் திசைதிருப்பவே இந்தத் திட்டம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏன் அனுமதித்தார், கடந்த 2020 ,ஜூன் 19-ல் சீனாவுக்கு பகிரங்கமாக ஏன் அனுமதி கொடுத்தார் என்பதற்கு பதில் சொல்லாத பிரதமர் மோடியின் உண்மையான, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் பயிற்சிதான்.” இவ்வாறு ஜெய்ராம் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொன்ல்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருவது குறித்து பிரதமர் மோடி தனது மவுனத்தைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.