சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நேற்று சந்தித்துப் பேசினார்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்ற பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராமலிங்கம் கூறியதாவது: தமிழகத்தில் ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டம் மூலம் காவிரி ஆற்றில் கலக்கக்கூடிய கிளை நதிகள், அதே இடத்தில் சுத்தப்படுத்தப்படும் திட்டத்துக்கு ரூ.11,900 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முதல்கட்டமாக ரூ.990 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கோரிக்கையை விடுத்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பதற்காக இங்கு வந்தேன். மேலும், மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பழனிசாமி உள்ளார். கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு, எத்தனை சீட் என்பதை அவர்தான் முடிவு செய்வார்.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் கடுமையாக உழைத்து, பழனிசாமியை முதல்வராக்கியே தீருவோம். தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என எல்லா கட்சிகளுக்கும் ஆசை உண்டு. அதற்காகத்தான் உழைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.