நமக்குள்ளே…

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வாதிகள் இழுத்துச் செல்ல முயற்சி செய்வதுதான் கொடுமை!

ஆந்திராவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை. பெண் அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே மகப்பேறு விடுமுறை என்கிற கட்டுப்பாடுகளையெல்லாம் நீக்கிவிட்டு, ‘எத்தனை குழந்தை பெற்றாலும் போட்டியிடலாம்; அத்தனை குழந்தைக்கும் மகப்பேறு விடுமுறை; இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் நிதிச் சலுகைகள்’ என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விரைவில் செயல்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார், மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு.

‘ஒவ்வொரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போதும் ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்’ என்பது ‘ஹைலைட்’ அறிவிப்பு. அவரின் ஒரே நோக்கம்… பெண்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வைப்பது. காரணம், ‘மக்கள் தொகை குறைவாக இருந்தால், அந்த மாநிலத்துக்கான நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்’ என்கிற அரசியல் பதற்றம்தான்.

இப்போதே இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடி. கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களின் எண்ணிக்கையை உழைப்புத் தளத்துக்கு நகர்த்தி, வீட்டையும் நாட்டையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு என்று பாதைகளை சீர்செய்து கொடுக்க வேண்டியதுதான் அரசுகளின் பொறுப்பு. ஆனால், ‘மனிதவளத்தில் செய்யும் முதலீடு’ என்கிற பெயரில், பணத்தாசை காட்டி அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளச் சொல்வது, சந்திரபாபுவின் சமூக அரசியல் அறிவின்மையையே காட்டுகிறது.

1970-களில் மத்திய, மாநில அரசுகளால் முன்னெடுக்கப்பட்ட `இரண்டு குழந்தைகள் கொள்கை’யை தென்மாநிலங்கள் சிறப்பாகப் பின்பற்றியதே, இன்றைய இமாலய வளர்ச்சிக்குக் காரணம். அதிக குழந்தைகள் இருந்திருந்தால்… சரியாக வளர்க்கவோ, கல்வி புகட்டவோ வழியின்றி, இம்மாநிலங்கள் பின்தங்கித்தான் போயிருக்கும், ஆந்திரா உட்பட.

நமக்குள்ளே…

அதற்கு நேர் எதிராக செயல்பட்டு, பெண்களை மட்டுமன்றி, தன்னுடைய மாநிலத்தை மட்டுமன்றி, பிற மாநிலங்களையும் பின்னோக்கித் தள்ளப்பார்க்கிறார், சந்திரபாபு. இவர் தரும் சலுகைகளை வைத்துக்கொண்டு, ஓரிரு மாத மருத்துவச் செலவுகளைக்கூட சமாளிக்க முடியாது. பிறகெப்படி, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது?

‘இரண்டுக்குப் பிறகு வேண்டவே வேண்டாம் என்கிற அரசாங்கத்தின் முன்னெடுப்பைப் பின்பற்றி நாட்டுக்கே முன்மாதிரியாக முன்னேறிக் காட்டிக்கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு, தொகுதிக் குறைப்பு தண்டனை கூடவே கூடாது’ என்று தன் தயவில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க கூட்டணி அரசைத்தான் இவர் மிரட்டிப் பணியவைக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து சுயநல அரசியலுக்காக, பணத்தைக் காட்டி பெண்களை பகடைக்காய்களாக மாற்றுகிறார்.

இவரைப்போல எத்தனை அரசியல்வாதிகள் வந்தாலும் உறுதியுடன் எதிர்க்க வேண்டும்… ‘கருப்பை, அரசாங்க சொத்து அல்ல’ என்பதை உணர்த்த வேண்டும் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.