ஏர் இந்தியாவின் அகமதாபாத் – லண்டன் விமானம் ரத்து: காரணம் என்ன?

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று மதியம் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு AI-159 என்ற விமானம் இன்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

“AI-171 என்ற எண் கொண்ட விமானம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் செல்வது வழக்கம். எனினும், கடந்த 12-ம் தேதி அந்த விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, திங்கள்கிழமை முதல் AI-159 என்ற எண் கொண்ட விமானத்தை ஏர் இந்தியா இயக்கத்தைத் தொடங்கியது. இந்நிலையில், செயல்பாட்டு சிக்கல்கள் (operational issues) காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், விமானம் ரத்து செய்யப்பட்டதற்கான “செயல்பாட்டு சிக்கல்கள்” குறித்து அந்த அதிகாரி விரிவாகக் கூறவில்லை. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட AI-171 விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI-171 விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.