வாஷிங்டன்: ஆபரேஷன் மிட்நைட் ஷேமர் மூலம் ஈரான் அணு சக்தி திட்டத்தை நாசமாக்கிவிட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் நேற்று கூறினார்.
ஈரான் மீது அமெரிக்க நேற்று அதிகாலை நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஷெக்சேத் பென்டகனில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ தாக்குதலில் ஈரான் அணு சக்தி திட்டம் நாசமானது. இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என பெயரிடப்பட்டது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.
ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் ஃபர்தோ ஆகிய இடங்களை குறிவைத்து தாக்கினோம். இந்த ஒருங்கிணைந்த தாக்குதலில் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் உட்பட 125-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பாறையில் ஊடுருவி தாக்கும் 14 ஜிபிஐ-57 குண்டுகள் மற்றும் பெர்சியன் வளைகுடா மற்றும் அரபிக் கடலில் இருந்த நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வீசப்பட்ட 30 டொமஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.
இதுபோன்ற தாக்குதலை இதுவரை எந்த நாடும் நடத்தியதில்லை. பி-2 குண்டு வீச்சு விமானங்கள் ரேடாரில் சிக்காமல் ஈரான் வான் எல்லைக்குள் புகுந்து, தாக்குதல் நடத்திவிட்டு திரும்பியது. நாங்கள் ஈரான் ராணுவ வீரர்களையோ, பொதுமக்களையே குறிவைக்கவில்லை. இந்த திட்டம் ஈரான் ஆட்சி மாற்றத்துக்கானது அல்ல. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை முறியடித்துள்ளோம். இவ்வாறு பீட் ஹெக்சேத் கூறினார்.
இந்த ஆபரேஷனை நடத்திய அமெரிக்க ராணுவ தளபதி ஜெனரல் டான் கெய்னி கூறியதாவது: இந்த வான்வழி தாக்குதல், எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி துல்லியமாக நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய 3 இடங்களிலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்து. ஈரான் நேரப்படி நேற்று அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. வானிலிருந்தும், கடலிருந்தும் ஒரே நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரானின் ஃபர்தோ அணுசக்தி மையம் குவாம் மலைக்கு கீழ் அமைந்துள்ளது. அங்கு 30,000 பவுண்ட் எடையுள்ள 6 ஜிபிஐ-57 குண்டுக ள் மூலம் தாக்குதல் நடத்தினோம். அதே நேரத்தில் யுஎஸ்எஸ் ஜியார்ஜியா மற்றும் யுஎஸ்எஸ் ப்ளோரிடா நீர்மூழ்கி கப்பல்கள் நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் பகுதியில் உள்ள கட்டிடங்களை தாக்கியது. இந்த இரண்டு இடங்களிலும் யூரேனியம் செறிவூட்டல் நடைபெறும் பகுதியாகும். இவ்வாறு ஜெனரல் டான் கெய்னி கூறினார்.
மிகப் பெரிய வெற்றி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘‘ ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையங்களை் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. அமைதி நிலவ வேண்டும் இல்லை என்றால் சோகம்தான் ஏற்படும். இந்த நடவடிக்கை அமெரிக்க ராணுவத்தின் மிகப் பெரிய வெற்றி’’ என்றார்.