2.45 லட்சம் பழைய வாகனங்கள் அகற்றம்: மத்திய அரசின் சட்டத்தால் பலன் என்ன?

புதுடெல்லி: நாடு முழுவதும் 2.45 லட்சம் பழைய வாகனங்கள் ஸ்க்ராப் (Scrap) செய்து அழிக்கப்பட்டுள்ளன. பழைய வாகனங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தால் பல்வேறு பலன்கள் கிடைத்துள்ளன.

அதிகமான மாசு மற்றும் சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்ட பழைய வாகனங்கள் குறித்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மத்திய அரசு பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை கடந்த 2021 ஆக.13-ல் வெளியிட்டது. இதன்படி, 10 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த டீசல் மற்றும் 15 வருட பெட்ரோல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த தடை டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுவரை 2.45 லட்சம் பழைய வாகனங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது. பழைய வாகனங்கள் அகற்றுதல் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் வகையில், டெல்லியில் ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு டீசல் அல்லது பெட்ரோல் வழங்க வேண்டாம் என்ற உத்தரவு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

மத்திய அரசின் கொள்கை அறிவிக்கப்பட்ட பிறகும் பலர், நாடு முழுவதும் பழைய வாகனங்களை இன்னும் அகற்றாமல் உள்ளனர். இதன் காரணமாக, பழைய வாகனங்கள் தொடர்பான கொள்கையை மத்திய அரசு இன்னும் தீவிரமாக அமல்படுத்தாமல் உள்ளது.

வாகனங்கள் அகற்றும் முறை: பழைய வாகன உரிமையாளர்கள் மத்திய அரசின் இ-வாஹன் அல்லது வி-ஸ்கிராப் இணையதளங்களில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்பிறகு அவர்களுக்கு அரசு சார்பில் வாகனங்கள் ஸ்கிராப்பிங் சென்டருக்கு (ஆர்விஎஸ்எஃப்) கொண்டு வர அறிவுறத்தப்படுகிறது.

உதிரி பாகங்கள் அகற்றம்: அங்கு பழைய வாகனங்கள் நேரடியாக பரிசோதிக்கப்படுகின்றன. பிறகு பழைய வாகனங்களின் டயர்கள், பேட்டரி, கண்ணாடி, இன்ஜின் போன்ற பாகங்கள் இயந்திரங்களால் தனியாகப் பிரிக்கப்படுகின்றன.

வைப்புச் சான்றிதழ்: இதன்பின், அந்த வாகனங்கள் கனரக இயந்திரங்களால் அழுத்தி உலோக ஸ்கிராப்பாக மாற்றப்படுகிறது. பின்னர் வாகன உரிமையாளருக்கு அதற்கான வைப்புச் சான்றிதழ் (சிடி) வழங்கப்படுகிறது.

புதிய வாகனங்களுக்கு வரிச் சலுகை: பழைய வாகனங்களை அகற்றியவர்கள், புதிய வாகனங்கள் வாங்கும்போது பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. புதிய வாகனத்துக்கான வரிச் சலுகை 15 முதல் 25 சதவீதம் வரை கிடைக்கிறது. இத்துடன், புதிய வாகனத்துக்கானப் பதிவுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

சலுகைகள் வழங்கும் தனியார் நிறுவனங்கள்: இவ்வாறு அகற்றப்படும் பழைய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு புதிய வாகனங்கள் வாங்கும்போது பல சலுகைகளை வாகன நிறுவனங்களும் வழங்குகின்றன. இந்தப் பட்டியலில், டாடா, மாருதி, மஹிந்திரா, ஹுண்டாய் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

பழைய வாகனங்கள் ஓட்டினால்… பழைய வாகனங்களுக்கு பல்வேறு சோதனைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. பழைய வாகனங்களின் பதிவுகளை நீட்டிப்பதற்கு அரசு அதிகமான கட்டணங்களை வசூலிக்கிறது.

பறிமுதல் நடவடிக்கை: பழைய வாகனங்களை ஓட்டி சாலை விதிகளை மீறினால் அவைகளுக்கு அதிகமான அபராதக் கட்டணம் விதிக்கப்படுகிறது. அதேநேரம், புதிய வாகனங்களுக்கான சாலை விதிமீறல் கட்டணங்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.