மும்பை: மகாராஷ்டிர தொடக்கப் பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. அந்த மாநிலத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளில் கடந்த ஏப்ரலில் மும்மொழி கொள்கை அமல் செய்யப்பட்டது.
இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 3-வது கட்டாய மொழி பாடமாக இந்தி கற்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்திவைக்கப்பட்டது.
பின்னர் கடந்த 17-ம் தேதி மகாராஷ்டிர அரசு தரப்பில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி விருப்பத்தின் அடிப்படையில் இந்தியை கற்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கற்பிக்கப்படும். எனினும் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த 20 சதவீத மாணவர்கள் விரும்பினால் இந்தியை தவிர்த்து வேறு பிராந்திய மொழியை கற்கலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டது. இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் நேற்று முன்தினம் கூறியதாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அமல் செய்வது தொடர்பாக கடந்த ஏப்ரல், ஜூனில் வெளியிடப்பட்ட அரசாணைகள் வாபஸ் பெறப்படுகிறது.
தொடக்கப் பள்ளியில் மும்மொழி கொள்கையை அமல் செய்வது தொடர்பாக கல்வியாளர் நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு ஆய்வு செய்யும். இந்த குழு அடுத்த 3 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.