பெங்களூரு,
நாட்டில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 20-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்து மக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் 20-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது 3 நாட்களிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து பண்டிகையை கொண்டாடுவார்கள். அதாவது 20-ந்தேதி தமிழர்களும், 21-ந்தேதி வடமாநில மக்களும், 22-ந்தேதி கன்னட மக்களும் தீபாவளியை கொண்டாட உள்ளனர்.
தீபாவளி பண்டிகை என்றால் பலகாரங்கள், புத்தாடைக்கு அடுத்து பட்டாசு தான் ஞாபகம் வரும். தீபாவளிக்கு வண்ண, வண்ண பட்டாசுகளை வெடிப்பது, வாணவேடிக்கைகள் நிகழ்த்துவது வழக்கம். ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்தியாவில் தீபாவளியையொட்டி அதிகளவில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், எனவே தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி அப்போது முதல் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பசுமை பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதையொட்டி பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடுவது வழக்கம். பட்டாசு வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும். அந்த தீர்ப்பின்படி, கர்நாடகத்தில் பசுமை பட்டாசுகளை தவிர பிற பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை செய்யப்படுகிறது. மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.