டிரானே,
அல்பேனியா தலைநகர் டிரானேவில் குற்றவியல் மேல்முறையீட்டு கோர்ட்டு அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார். அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே அங்கு நின்றிருந்த குற்றவாளி எல்விஸ் ஷ்கெம்பி, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நீதிபதியை நோக்கி சரமாரியாக சுட்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டுகளால் துளைக்கப்பட்டு படுகாயமடைந்த நீதிபதி, சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து எல்விஸ் ஷ்கெம்பியை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அலட்சியமாக செயல்பட்ட கோர்ட்டு பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையின்போது நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.