“ரஜினி நடித்தால் திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும்'னு நினைக்குறாங்க'' – எஸ்.ஏ சந்திரசேகர்

அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவையார் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

‘ராம் அப்துல்லா ஆண்டனி’
‘ராம் அப்துல்லா ஆண்டனி’

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், “இப்படத்தின் டிரெய்லர் நன்றாக இருக்கிறது. அதைப் பார்த்த பிறகுதான் நான் இந்த விழாவிற்கு வர முடிவு செய்தேன்.

ஒரு படத்தின் டிரெய்லரைப் பார்த்தவுடன் அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டவேண்டும். சில படங்களுக்கு ‘டிரெய்லர்’ எப்படி கொடுக்கவேண்டும் என்பதே தெரியவில்லை.

வன்முறைப் படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று எண்ணிக் கத்தி, ரத்தம், சத்தம் என்ற மூன்றை நம்பித்தான் இப்போதுள்ள இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள்.

எங்கள் காலகட்டத்தில் பொழுதுபோக்கு படங்கள்தான் அதிகம் எடுக்கப்பட்டன. அதற்குள் ஏதாவது தேவையான விஷயங்களைப் புகுத்தியிருப்போம். நாட்டில் நடக்கும் தவறுகளைத் தைரியமாக சினிமாவில் சொல்லுவோம்.

சினிமாதான் வாழ்க்கை என்று தற்போது நினைக்கிறார்கள். அதனால்தான் பள்ளி மாணவர்கள் கூட கத்தியுடன் அலைகிறார்கள்.

வருங்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், இயக்குநர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எஸ்.ஏ. சந்திரசேகர்
எஸ்.ஏ. சந்திரசேகர்

சினிமாவை நல்ல விதமாக பயன்படுத்தி வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன்.

பல படங்களுக்கு ஃபைனான்ஸ் கொடுக்க யாரும் தயாராக இல்லை. ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுக்கு மட்டும்தான் ஃபைனான்ஸ் கொடுக்கிறார்கள்.

ரஜினி நடித்தால் திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும். தயாரிப்பாளர்கள் சேஃப் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.