அ.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை எனவும், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அவசர வழக்காக நீதிபதி பி.டீ.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனை செய்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை வாரியம் தெரிவித்ததாகவும், ஆனால் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி இருப்பதாகவும் கண்காணிப்பு அதிகாரியும் இதனை உறுதி செய்த நிலையில் யாரோ புகாரளித்துள்ளதாகக் கூறி சான்றிதழ் வழங்கமால் இருப்பதாகக் கூறினார்.
யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் குறிப்பிடப்பட்டது.

மேலும், ஜனநாயகன் படம் ஐந்நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், `படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய காட்சிகள் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக’ கூறினார்.
`குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென நிர்பந்திக்க முடியாது’ எனவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.