சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.
த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றிருந்தது.

இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் இப்படத்தின் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி.
அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் டிரெய்லர் தொடர்பான அப்டேட்களைக் கேட்கத் தொடங்கினர்.
தற்போது, ஆர்.ஜே. பாலாஜி டிரெய்லர் அப்டேட் குறித்த கேள்விகளுக்குக் காணொளி வாயிலாகப் பதிலளித்திருக்கிறார்.
அந்தக் காணொளியில் அவர், “நான் இந்த மாதிரி சீட் பெல்ட் போட்டு ஏதாவது வீடியோ போட்டாலே ஏதாவது ஒரு அப்டேட்டோட வரேன்னு அர்த்தம். அடுத்த வாரம் இதே நேரம், ‘கருப்பு’ படம் ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளைக் கவனிச்சுட்டு இருப்போம்.
படத்தின் டிரெய்லர் ரெடி. அனைவருக்கும் டிரெய்லர் பிடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா இப்போ நிறைய அரசியல் நிகழ்வுகள் நடந்துட்டு இருக்கு.
நாம் ஆசையாக ஓட்டுப் போட்டு ஒரு விஷயம் நடந்திருக்கு என்கிற மகிழ்ச்சியோட இருக்கும்போது பல எதிர்பாராத திருப்பங்கள். இந்தத் திருப்பங்கள்லாம் முடிஞ்சு, நல்ல விஷயம் நம்ம எதிர்பார்க்கிற விஷயம் சீக்கிரமே நடக்கட்டும்.

அதுக்கு நம்மலாம் வேண்டிப்போம். நல்லது நடக்கட்டும். நாம் டிரெய்லரை விட்டுட்டு அதுக்கப்புறம் பார்த்தா திடீர்னு அரசியல் விஷயங்கள் பயங்கரமா டேக் ஓவர் பண்ணக் கூடாதுன்னு காத்திருக்கோம்.
சீக்கிரமே ஒரு தெளிவு பிறக்கட்டும். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி படத்தை ரிலீஸ் பண்றதுக்கு பிளான் பண்ணிட்டு இருக்கோம்.
சீக்கிரமே அடுத்த கட்ட நடவடிக்கையோட உங்களைச் சந்திக்கிறேன். கருப்பன் கூட இருக்கான், கூட வருவான், நம்மள செமையா பாத்துப்பான்!” எனக் கூறியிருக்கிறார்.