குடியரசு தின அலங்கார ஊர்தி: தேர்தல் கிஃப்ட்… பரிசை தட்டி சென்ற உ.பி.,!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 73ஆவது
குடியரசு தினம்
கடந்த மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், தமிழக ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சகங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை.

இதையடுத்து, தமிழக அரசின் அலங்கார ஊர்தியை சென்னை மெரீனாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இடம்பெற செய்த முதல்வர் ஸ்டாலின், அந்த ஊர்தியை பொதுமக்களின் கண்டுகளிக்கும் பொருட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றிவரச் செய்துள்ளார்.

இந்த நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் உத்தரப்பிரதேசத்தின் சார்பில் இடம்பெற்ற
அலங்கார ஊர்தி
சிறந்த அலங்கார ஊர்திக்கான பரிசை வென்றுள்ளது. இந்தாண்டு அணிவகுப்பில் மொத்தம் 25 அலங்கார ஊர்திகள் இடம் பெற்றன. மத்திய அரசின் முக்கிய துறைகளைச் சார்ந்த 13 அலங்கார ஊர்திகளும், 12 மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் இடம் பெற்ற நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஊர்தி பரிசை தட்டி சென்றுள்ளது.

“பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள்” இடம் பெற்றால்தான் அனுமதிப்போம், வ.உ.சி, வேலுநாச்சியார் போன்ற சுதந்திரபோராட்ட வீரர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என கூறி தமிழக அரசின் ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், உத்தரப்பிரதேச ஊர்தியில் வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் உருவப் படங்கள் அடங்கிய மாதிரிகள் இடம் பெற்றிருந்தன என்பது கவனிக்கத்தகக்து.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது,
உத்தரப்பிரதேசம்
உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் ஊர்திக்கு சிறந்த ஊர்திக்கான பரிசு கொடுக்கப்பட்டத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.