பாகிஸ்தானில் ஹீலர் பேச்சைக் கேட்டு தலையில் ஆணி அடித்துக் கொண்ட கர்ப்பிணி| Dinamalar

பெஷாவர்: ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான பாகிஸ்தானிய கர்ப்பிணி பெண் ஒருவர் மாய, மந்திரங்களை பயிற்சி செய்யும் ஹீலர் ஒருவரின் பேச்சை கேட்டு, ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் நெற்றியில் ஆணி அடித்துக்கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் வலி பொறுக்க முடியாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் வழிபாடுகள் மாய மந்திரங்கள் மூலமாக நோயை குணப்படுத்தும் ஹீலர் உள்ளனர். அறிவியலை நம்ப மறுக்கும் ஒரு கூட்டம் இதுபோன்ற பேர்வழிகளின் பேச்சை உடனே நம்பிவிடுகின்றது. அந்த வகையில் பாகிஸ்தானின் பெஷாவரைச் சேர்ந்த மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் மீண்டும் கருவுற்றுள்ளார். ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக மத ஹீலர் ஒருவரை நாடியுள்ளார். அவர் ஆணியை தலையில் அடித்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார். அதனை அப்பெண் நம்பி செயல்படுத்தியும் உள்ளார்.

சிறிது நேரத்தில் வலி பின்னி எடுக்கவே இடுக்கி மூலமாக அதனை பிடுங்க முயற்சித்துள்ளார். அம்முயற்சி தோல்வியில் முடியவே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். சுயநினைவுடன் அப்பெண் வந்ததாகவும், ஆனால் வலியில் கதறியதாகவும் சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார். எக்ஸ்-ரே எடுத்து பார்த்த போது 5 செ.மீ. அளவு ஆணி உள்ளே இருந்துள்ளது. மூளையை தொடாமல் இருந்ததால் அப்பெண் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை மூலமாக ஆணியை அகற்றிவிட்டனர். ஆணி அடிக்க சொன்ன ஹீலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.