கனடாவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனம்| Dinamalar

ஒட்டாவா: கனடாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி கட்டாயம் என்ற விதிமுறைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடா வரலாற்றில், அவசர நிலை பிறப்பிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்னர் 1980ல் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத டிரைவர்கள் தனிமை முகாமில் தங்க வைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கனடாவின் விண்ட்சர் நகரையும், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரையும் இணைக்கும் மேம்பாலத்தில் போராட்டக்காரர்கள் அதிக அளவில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கைது செய்த போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் வரலாற்றில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.

இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் பொது இடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையை சமாளிக்க அவசர நிலை பிறப்பிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ராணுவம் களம் இறக்கப்படாது. அதேநேரத்தில் போராட்டக்காரர்களை கைது செய்யவும், போராட்டத்தில் பயன்படுத்தப்படும் டிரக்குகளை பறிமுதல் செய்யவும், நிதியுதவியை தடுக்கவும் அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் கூறுகையில், கவுட்டீஸ்,அல்பெர்டா, ஸ்வீட்கிரஸ் மற்றும் மோன்டானா எல்லை பகுதிகளில் 11 போராட்டக்காரர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரைபிள், கைத்துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.