கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் ரகானே-புஜாரா இடங்களை நிரப்பப்போவது யார்..?

மொகாலி, 
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர். 
இந்த நிலையில், இப்போட்டியில் அஜிங்கியா ரகானே மற்றும் சடேஷ்வர் புஜாரா ஆகிய இருவருடைய இடத்தை பிடிப்பதற்கான போட்டி அதிகரித்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த நடுவரிசை ஆட்டக்காரர்களான இவர்கள் இருவரும் தற்போது பார்ம் இன்றி தவித்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுடைய இடத்தில் விளையாடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த இடத்துக்கான போட்டியில் சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் உள்ளனர்.
இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர்களான பிரியங்க் பஞ்சால், கே.எஸ் பாரத்,  சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஹனுமா விகாரி ஆகியோர் உள்ளனர். மூத்த வீரர்களான ரகானே, புஜாரா, விருத்திமான் சாஹா மற்றும்  இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து சுப்மான் கில் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம். விஹாரி 3-வது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது.விராட் கோலி 4-வது வீரராக களமிறங்குவார். அப்போது ஸ்ரேயாஸ் அய்யர் 5-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் களமிறங்குவார்கள் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.