மாலி: ராணுவ படைத்தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 27 வீரர்கள் பலி

பமாகோ:
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வபோது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் மண்டூரா மாகாணத்தில் உள்ள ராணுவ படைத்தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ராணுவ தளத்திற்குள் ஓட்டி வந்த பயங்கரவாதி அதை வெடிக்கச்செய்தன்.
அதன்பின்னர், ராணுவதளத்தை சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர். ராணுவ தளத்தில் இருந்து 7 வீரர்களை பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக கொண்டு சென்றனர்.
ஆனாலும், இந்த மோதலின்போது ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாலி பிரான்சின் காலனி நாடாகும். மாலியில் 2013-ம் ஆண்டு முதல் பிரான்ஸ் படைகள் நிலைநிறுத்தப்பட்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடந்த மாதம் மாலியில் இருந்து தனது படைகள் அனைத்தையும் பிரான்ஸ் திரும்பப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.