'பாகுபலி' வெற்றியை மீண்டும் பெறுவாரா பிரபாஸ்?

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு அவர் பான்-இந்தியா நடிகராக மாறிவிட்டார். அதற்குப் பிறகு அவர் நடித்து 2019ல் வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளில் குறைவான வசூலைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

தற்போது நான்கைந்து பான்–இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸின் அடுத்த படமாக 'ராதே ஷ்யாம்' படம் வரும் மார்ச் 11ம் தேதி பான்–இந்தியா படமாக வெளிவர உள்ளது. 1970களில் நடக்கும் காதல் கதையாக வெளிநாட்டை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் படம். படத்தின் டிரைலரைப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு 'எலைட்' படம் போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் மற்ற மொழிகளிலும் வசூலைக் குவிக்க அது அனைத்து ரசிகர்களுக்கமான படமாக இருந்தது முக்கிய காரணமாக அமைந்தது. 'சாஹோ' படத்தை 'ஸ்டைலிஷ் ஆக்ஷன்' படமாக உருவாக்கியதே அதன் சறுக்கலுக்குக் காரணம். இப்போது 'ராதே ஷ்யாம்' படம் 'ஸ்டைலிஷ் ரொமான்ஸ்' படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் 'ஏ' சென்டர்கள் தவிர மற்ற பி அன்ட் சி சென்டர்களில் எப்படி ஓடும் என்ற சந்தேகம் தெலுங்குத் திரையுலகில் கூட இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.