திரௌபதி அம்மன் சிலையை ஆனந்த கண்ணீருடன் வழி அனுப்பி வைத்த குடும்பத்தினர்.!!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, பெரியமதகு கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் 200 வருடம் பழமையான திரௌபதி, கிருஷ்ணர், அர்ச்சுனர் ஐம்பொன் சுவாமி சிலைகள் உள்ளன. சாலக்கரை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த மாரியம்மன் கோவிலுக்கு, கடந்த 52 வருடம் முன்னதாக ஸ்ரீ திரௌபதியம்மன் கோவிலில் இருந்து மேற்கூறிய 3 சுவாமி சிலைகளும் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 

ஆனால், இந்த சிலைகள் மீண்டும் பெரியமதகு திரௌபதி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இதனால் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் சுவாமி சிலைகளை பராமரித்து வந்த நிலையில், சமீபத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் கும்பாவிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் திரௌபதி அம்மன் கோவில் சிலைகளை ஒப்படைக்க முடிவெடுத்து இருக்கின்றனர்.

அதன்படி, மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் திரு.ம இராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தார் தங்களின் விருப்பத்தை ஊர் மக்களிடம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த முடிவுக்கு ஊர் மக்களும் மனதார ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, 52 வருடத்திற்கு முன்னதாக சாலக்கரை மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட ஐம்பொன் சுவாமி சிலைகளான ஸ்ரீ திரௌபதி, கிருஷ்ணர், அர்ச்சுனர் சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திரௌபதி அம்மன் கோவிலில் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வின் போது அறங்காவலரின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் இருந்தனர். இந்த நெகிழ்ச்சி செயலால் பெரியமதகு மற்றும் சாலக்கரை மாரியம்மன் கோவில் தெரு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.