மோடி – இலங்கை அமைச்சர் சந்திப்பு; யாழ்ப்பாணம் ஏர்போர்ட் & துறைமுக திட்டங்களில் கவனம் செலுத்தும் இந்தியா

Nirupama Subramanian 

Sri Lankan minister in Delhi, India eyes Jaffna airport, harbour projects: இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகையின் போது உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக இலங்கைக்கான 1 பில்லியன் டாலர் அவசரக் கடனில் கையெழுத்திட இந்தியா தயாராகி வரும் நிலையில், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் கூட்டு மேம்பாடு குறித்த முந்தைய முன்மொழிவுகளை இறுதி செய்ய இலங்கை முயற்சிக்கும். இந்த இரண்டு திட்டங்களும் யாழ்ப்பாண தீபகற்பத்தில், தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு அருகில் உள்ளவை.

மூன்று நாள் பயணமாக புதன்கிழமை டெல்லி வந்த பசில் ராஜபக்சே, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மேலும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து கடன் வழங்குவதை இறுதி செய்ய உள்ளார்.

2020 டிசம்பரில் பசில் ராஜபக்சவின் கடைசிப் பயணத்திற்குப் பிறகு, ஜனவரி முதல், 1.4 பில்லியன் டாலர்களை கொழும்பிற்கு இந்தியா வழங்கியுள்ளது. இதில் $500 மில்லியன் கடன், $400 மில்லியன் நாணய பரிமாற்றம் மற்றும் ஆசிய கிளியரிங் யூனியனுடன் கடன் ஒத்திவைப்புக்காக $500 மில்லியன்.

இந்தியா எந்த நிபந்தனைகளையும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தியாவின் ஆலோசனையின் பேரில் IMF பிணையெடுப்புக்கான செயல்முறையை இலங்கை தொடங்கி, சமீபத்திய வாரங்களில் பல இந்திய திட்டங்களுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கிற்கு அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான இலங்கையின் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை இலங்கை எழுத்துப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து மோடியிடம் பசில் ராஜபக்ச விளக்கியதாகவும், இலங்கை பொருளாதாரத்திற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டைநாடு முதற்கொள்கை மற்றும் கடல்சார் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) கோட்பாட்டில் இலங்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்று பிரதமர் மோடி கூறினார். பௌத்த மற்றும் ராமாயண சுற்றுலாக்களை கூட்டாக ஊக்குவிப்பது உட்பட, இருதரப்பு சுற்றுலாப் பயணிகளை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் மோடி குறிப்பிட்டார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அதிகாரி ஒருவர், பலாலி மற்றும் காங்கேசன்துறையில் உள்ள இரண்டு “இணைப்பு” திட்டங்களை விரைவாக முடிக்க இலங்கைக்கு இந்தியா “அழுத்தம் கொடுப்பதாக” கூறினார். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் 2020 ஆம் ஆண்டு தொற்றுநோய்களின் இரட்டை அடிக்குப் பின்னர் இலங்கை அதன் சுற்றுலாத் துறையை மீண்டும் புதுப்பிக்க இந்த இரண்டு திட்டங்களும் உதவும் என்று அந்த அதிகாரி கூறினார்.

இதையும் படியுங்கள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு.. ஜாதி அடிப்படையிலான ஊதியத்தை அகற்ற பரிந்துரை!

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் இடையே படகு சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இரு தரப்பும் பரிசீலித்து வருகின்றன.

பலாலி விமான நிலைய ஓடுபாதையின் ஒரு பகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு அக்டோபர் 2019 இல் சென்னையில் இருந்து பொதுமக்கள் விமானங்களுக்கு திறக்கப்பட்டது, ஆனால் தொற்றுநோய்க்குப் பிறகு மூடப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்று அழைக்கப்படும் இந்த விமானநிலையத்தின் ஓடுபாதை வசதியை மீண்டும் திறப்பதற்கான அறிகுறியை இலங்கை வெளிப்படுத்தவில்லை. பலாலியில் ஓடுபாதை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அதன் நீளத்தை அதிகரிக்க இந்தியா உதவியது, மேலும் ஓடுபாதை மேம்பாட்டிற்கு உதவுவதாக இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 2018 இல் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இதனையடுத்து எக்ஸிம் வங்கியானது சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கும், புவி-இடசார் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் மற்றும் சிதைவுகளை அகற்றுவதற்கும் நிதி வழங்கியது. ஆனால் தற்போது, திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இரண்டு திட்டங்களும் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் வடகிழக்கு மற்றும் 2009 இல் முடிவடைந்த அதன் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் பகுதிகளையும் இந்தியாவின் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கும்.

மார்ச் 11 அன்று, இந்திய நிறுவனங்கள், இந்தப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான மற்ற இரண்டு முக்கிய ஒப்பந்தங்களை செய்தன: தேசிய அனல் மின் கழகம் மற்றும் இலங்கை மின்சார வாரியம் இடையே திருகோணமலையில் சம்பூரில் சூரிய மின்சக்தி ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் வடமேற்கில் மன்னாரில் 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள இரண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மையங்கள் அமைப்பதற்கான அதானி குழுமத்தின் ஒப்பந்தம்.

அதானி ஒப்பந்தத்தின் விதிமுறைகள் பொது வெளியில் இல்லை என்றாலும், கடந்த ஆண்டு இந்தியாவின் எதிர்ப்பில், யாழ்ப்பாணத்திற்கு அப்பால் உள்ள தீவுகளில் ஒரு சீன புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை இலங்கை ரத்து செய்ததால், இரண்டு ஒப்பந்தங்களும் குறிப்பிடத்தக்கவை. பல தடைகளை எதிர்கொண்ட மற்றொரு திட்டமான திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையின் கூட்டு அபிவிருத்திக்கான ஒப்பந்தத்தில் ஜனவரி மாதம் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டன.

மோடியும் பசில் ராஜபக்சேவும் “பல்வேறு இருதரப்பு விவகாரங்கள்” குறித்து விவாதித்ததாகவும், சுற்றுலா மற்றும் மீன்வளம் தவிர, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் “டிஜிட்டல்மயமாக்கல்” என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது இலங்கையில் ஆதார் மாதிரியை பிரதிபலிக்கும் சமீபத்திய ஒப்பந்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.