எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்து தீக்கிறையான வீடு! பின் கதவில் தப்பித்த குடும்பத்தினர்

திருவள்ளூரில் எலக்டரிக் பைக் தீப்பற்றி எரிந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (45). விவசாயியான இவர், ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக்கை கடந்த 7 மாதங்களாக பயன்படுத்தி வந்த நிலையில், தேவராஜ் வெளியூருக்குச் சென்றதால் பைக்கை வீட்டில் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில், எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
image
இதைத் தொடர்ந்து பரவிய தீ அருகில் இருந்த மற்றொரு பெட்ரோல் வாகனத்தின் டேங்க் வெடித்ததில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவி வீட்டின் முன் பகுதி முழுவதுமாக எரிந்துள்ளது. இதையடுத்து குளிர்சாதன பெட்டி, மின் உபயோக பொருட்களும் தீயில் கருகி நாசமானது.
image
இதுகுறித்து பேரம்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயில் எரிந்து கொண்டிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் மற்றும் வீட்டின் முன் பகுதியையும் அணைத்தனர். அப்போது தேவராஜின் தாய், மனைவி மற்றும் மகன் ஆகிய மூவரும் பின் கதவு வழியாக வெளியேறி நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த மப்பேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.