ஆர்ஆர்ஆர் – 'அப்செட்' ஆகிவிட்டாரா ஆலியா பட்

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். அவர் நடித்த முதல் தென்னிந்தியப் படமான ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த வாரம் வெளியானது. படத்தில் ஆலியா தான் கதாநாயகி என்று சொன்னார்கள். ராம் சரணின் ஜோடியாக நடித்தவரும் அவர்தான். படம் வருதவற்கு முன்பே ஆலியா பட் படத்தில் பதினைந்து நிமிடம் மட்டுமே வருவார் என்றும் தகவல் வெளியானது. நேரம் குறைவாக இருந்தாலும் பிரம்மாண்டமான படம் என்பதால் இப்படத்தில் நடிக்க ஆலியா சம்மதித்தார் என்றும் சொன்னார்கள்.

ஆனால், படம் வெளிவந்த பிறகு ஆலியா பட் பயங்கரமாக 'அப்செட்' ஆகிவிட்டாராம். படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு கதாநாயகிக்குரிய முக்கியத்துவமான காட்சிகளாக இல்லாமல் இருந்தது. ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்தது போல் தான் இருக்கிறது என்றும் விமர்சனங்கள் வெளிவந்தன. அதே சமயம் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக நடித்த ஒலிவியா மோரிஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஆலியாவின் காட்சிகளை விட சிறப்பாக இருந்தது என்ற கருத்தும் வெளியானது.

சமீபத்தில்தான் பாலிவுட்டில் ஆலியா முதன்மைக் கதாநாயகியாக நடித்த 'கங்குபாய் கத்தியவாடி' படம் மூலம் நல்ல பெயரையும், பாராட்டுக்களையும் பெற்றார். அதற்கடுத்து இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஆலியா நடித்திருக்கக் கூடாது என்றும் பாலிவுட்டில் பேசுகிறார்களாம். எனவே, தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் 'ஆர்ஆர்ஆர்' சம்பந்தப்பட்ட பல பதிவுகளை 'டெலிட்' செய்துவிட்டார் ஆலியா. மேலும், சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ராஜமவுலியை 'அன்பாலோ' செய்துவிட்டாராம் ஆலியா.

ஆலியாவின் இந்த செயல் தெலுங்கு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியான சில நாட்களுக்குள் இது நடந்திருப்பதும் ஆச்சரியமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.