மத ரீதியாக மக்களிடம் பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர் – பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

கோவை: சிலர் மக்களிடையே மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் என தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று செவ்வாய்க்கிழமை சிறுபான்மையினர் நலன் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரவிச்சந்திரன், ஆணையத்தின் உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா, ப்யாரேலால் ஜெயின், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) எஸ்.செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடப்பாண்டில், சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் மத மோதல்களை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ, சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளனர். அதே சமயம், சிறுபான்மையின மக்கள் ஆராதனை, வேண்டுதல் என்ற பெயரில் ஒலிப்பெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்ற ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் எந்த அளவுக்கு சமூக அமைதி நிலவுகிறதோ, அந்த அளவுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். சமூக அமைதியை சீர்குலைக்கவும், மக்களை மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி.

இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள், பள்ளிக்கூடம், வங்கி கிளை வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர். சிறுபான்மை இன மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டும் மேடை ஆகியவை அனைவருக்கும் பொதுவானது. இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துறந்துவிட்டு தான் செல்ல வேண்டும். முதல்வரின் எண்ணமும் அதுதான். மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம்” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.