அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரபலமான ஒரு தெருவுக்கு பிள்ளையார் கோயில் தெரு என பெயர் சூட்டப்பட்டிருப்பது அங்குள்ள இந்தியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வட அமெரிக்காவிலேயே முதல் முறையாக கடந்த 1977 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஸ்ரீ மகா வல்லப கணபதி கோயில். அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்காகவும், அடிமைத்தனத்திற்கு எதிராகவும் போராடிய ஜான் பவுனேவை கவுரவப்படுத்தும் வகையில் நியூயார்க்கின் குயின்ஸ் கவுன்டியில் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அந்த தெரு முனையில் தான் வல்லப மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியில் அடையாள கோபுரமாகவும் பிள்ளையார் கோயில் விளங்கி வருகிறது.
இதையடுத்து, அந்த கோயிலை கவுரவப்படுத்தும் வகையில் பவுனே தெருவின் உப பெயராக பிள்ளையார் கோயில் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக நடந்த சிறப்பு விழாவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரி ரந்திர் ஜெய்ஷ்வால், குயின்ஸ் பாரோ தலைவர் டோனோவான் ரிச்சர்ட்ஸ் மற்றும் இந்தியர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிள்ளையார் கோயில் தெரு என்ற பலகை திறக்கப்பட்டதும், அங்கிருந்த அர்ச்சகர்கள் அதற்கு ஆரத்தி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க: இந்துக்கள் ஆயுதமேந்த வேண்டும் என பேச்சு – மதத் தலைவர் மீது வழக்கு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM