மாஸ்கோ:
ரஷியாவின் நட்பு நாடுகளான ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்களுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியில் நேற்று நடந்த தேர்தலில் வலதுசாரி ஃபிடெஸ் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், பிரதமர் விக்டர் ஆர்பனுக்கு புதின் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில், “சர்வதேச அரசியலில் கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், இருதரப்பு நட்புறவை மேலும் மேம்படுத்துவது இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும்” என கூறி உள்ளார்.
இதேபோல் செர்பியாவில் நடந்த தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அலெக்சாண்டர் வுசிக்கிற்கும் புதின் வாழ்த்து கூறி உள்ளார்.
தேர்தல் முடிவானது அவரது சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்த பெரிய அளவிலான மக்கள் ஆதரவை உறுதிப்படுத்துவதாக புதின் கூறி உள்ளார். வுசிக்கின் நடவடிக்கைகள் ரஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை யுக்தியை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.