முரசொலி பஞ்சமி நிலம் வழக்கு: மத்தியமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள நிலம்,  பஞ்சமி நிலமா என்பது தொடர்பான வழக்கில்,  மத்தியமைச்சர் எல்.முருகன் ஆஜராக  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. நாளேடான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள கோடம்பாக்கம்  நிலம் பஞ்சமி நிலமா என்பது குறித்த  சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினார். இதற்குப் பிறகு, பா.ஜ.கவும் இந்த விவகாரத்தில் தி.மு.கவை குற்றம்சாட்டியது. முரசொலி அமைந்திருக்கும் நிலம், பஞ்சமி நிலம் என்றும் அதனால் அதனை கையகப்படுத்தி உரியவர்களுக்குத் தர வேண்டுமென்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தது.

 அதை பதிவு செய்த ஆணையம், விசாரணை நடத்தியது. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆஜராகவும் உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் அதற்கு தடை போட்டதுடன், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் (தற்போது மத்திய இணை அமைச்சர்)  விலகியிருக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை அப்போது மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கிடையில், முரசொலி அறக்கட்டளை சார்பில், எல்.முருகன் மீது வழக்கு அவதூறு வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து வரும் 22ந்தேதி எல்.முருகன் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.