இலங்கை போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு… காலவரையற்ற ஊரடங்கு அறிவிப்பு

இலங்கை ரம்புக்கனாவில் மக்கள் போராட்டம் கலவரமாக வெடித்து ஒருவர் உயிரிழந்த நிலையில் காலவரையற்ற ஊரடங்கு அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபய பதவி விலகக் கோரி நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒரு மாதத்தில் இரு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் கொதித்தெழுந்த மக்கள் கொழும்பு அடுத்த ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருக்கு, பொது மக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்களை தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, ரம்புக்கனா பகுதியில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். முக்கியச் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார், ராணுவம், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீதிகள், முக்கியச் சாலைகள் பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சி அளிக்கின்றன.

மேலும் மக்களுக்கு கூடுதல் தலைவலியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாயக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு கடும் மருந்து தட்டுப்பாடு நிலவும் என புதிதாக பதவியேற்ற சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது கண்மூடித்தன தாக்குதல் நடத்தி போலீசார் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே இலங்கையின் பணவீக்கம் 74சதவீதமாக உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் உள்ளரங்கு நிகழ்வு மற்றும் பொது போக்குவரத்தை தவிர்த்து மற்ற இடங்களில் முகக்கவசம் அணிய அவசியமில்லை என அரசு அறிவித்து உள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.