விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர்கள் பங்கேற்க தடை- வெளியான தகவல்

லண்டன்:
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷிய வீரர்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடை விதிப்பதற்கு அந்த போட்டியை நடத்தும் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் விம்பிள்டனில் பங்கேற்பது குறித்து பிரிட்டிஷ் அரசுடன் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அமைப்பு ஆலோசனை செய்தது. இதுகுறித்த முடிவை மே மாதம் மத்தியில் வெளியிடுவோம் என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது ரஷிய வீரர்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் டேனில் மெத்வதேவ், 8-வது இடத்தில் உள்ள ஆண்ட்ரி ரூப்ளேவ் ஆகியோர் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. மேலும் மகளிர் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 15-வது இடத்தில் உள்ள அனஸ்தேசியா பாவ்லிசென்கோவா ஆகியோரும் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.
அதேபோல் பெலராஸ் வீரர்களும் விம்பிள்டனில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஷிய படையெடுப்புக்கு ஆரம்ப காலங்களில் உறுதுணையாக இருந்ததால் அந்த நாட்டு வீரர்களும் போட்டியில் பங்கேற்க தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான டென்னிஸ் அமைப்புகள் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களை சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க ஏற்கனவே தடைவிதித்துள்ளன. ரஷிய வீரர்கள் தனிப்பட்ட முறையில் விளையாடலாம் ஆனால் அவர்களது நாடு அல்லது கொடியின் கீழ் விளையாடக்கூடாது என கூறியுள்ளது.
இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டி ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.