டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் விதித்த தடை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் விதித்த தடை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகேஸ்வர ராவ் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் அதன் மீது அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை ஜஹாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் எனகூறியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு மேயருக்கு தெரிவித்த பிறகும் இடிக்கும் பணிகள் தொடர்ந்தது பற்றி தீவிரமாக பரிசீலிப்போம் என கூறியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது தேவைதான், ஆனால் குறிவைத்து இஸ்லாமியர்கள் வீட்டை மட்டும் ஆக்கிரமிப்பு எனக்கூறி இடிப்பது நியாயமா? என கபில் சிபில் வாதம் செய்தார். ஜகாங்கீர்பூரி கடைகள், வீடுகள், ஆக்கிரமிப்புகள் இடிப்பு வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். டெல்லி ஜஹாங்கீர்புரியில் கட்டடத்தை இடிப்பது ஒரு நகரத்தின் பிரச்சனையல்ல, நாட்டின் பிரச்சனை. இதை நாம் அனுமதித்தால் பின்னர் நாட்டில் சட்டம் இருக்காது. டெல்லி பாஜக தலைவர் சொன்னதும் கட்டடத்தை இடிக்க தொடங்கிவிட்டனர், என்ன நியாயம் இது என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் வாதம் செய்தார். டெல்லியில் வன்முறை வெடித்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை இடிக்க தற்காலிக தடை விதித்து நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் கூறியிருந்தது. நேற்று போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கிய நிலையில் தடை விதிக்கப்பட்டது. வழக்கறிஞர் கபில் சிபில், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் தலைமை நிதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.