என்எல்சி நிர்வாகமே! தேர்வு வாய்ப்பை கொடுப்பதா? பறிப்பதா?- மதுரை எம்.பி கேள்வி

என்.எல்.சி நிர்வாகமே! இன்னும் எத்தனை வழிகளை தேடுவீர்கள் தமிழர்களை புறக்கணிக்க..? தேர்வு என்பது வாய்ப்பை கொடுப்பதா? பறிப்பதா என சு.வெங்கடேசன் எம்.பி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாக பயில்நர் பதவிக்கான 300 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை என்.எல்.சி நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. ஏற்கெனவே 2020-இல் இதே பதவிக்கான பணி நியமனங்கள் நடைபெற்றன. ஆனால் 2022-இல் தேர்வு முறையில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. GATE – 2022 மதிப்பெண் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் அமையும் என்று அறிவிக்கப்பட்டது.
image
GATE 2022 தேர்வுகள் தகுதியாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிந்திருந்தால் பலர் தயாராகி இருப்பார்கள். ஆனால் அதற்கான அவகாசம் தரப்படவில்லை. அறிவிக்கை மிக மிக நெருக்கு வெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே GATE  2022 எழுதாதவர்கள் தேர்வு முறைமைக்கு வெளியே நிறுத்தப்பட்டு விட்டனர். இது அநீதியானது. சமவாய்ப்பை மறுப்பது.
இன்னொரு முக்கிய விசயம். ஏற்கெனவே தேர்வுப் பட்டியலின் உள்ளடக்கம், தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை கேள்விக்குறியாகி இருக்கிறது. 2010-க்கு முன்பாக தேர்வுப் பட்டியலில் 80 சதவீதம் பேர் வரை கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இடம் பெற்றதுண்டு. 2020 இல் 5 சதவீதத்துக்கும் கீழே இந்த விகிதம் போய் விட்டது.
image
இந்த தேர்வுப் பட்டியல் வெளிவந்தால் பேரதிர்ச்சியை தரக் கூடும். 300 பேர் கொண்ட தேர்வுப் பட்டியலில் ஒரு தமிழராவது இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நான் இன்று என்.எல்.சி தலைவர் ராகேஷ் குமார்க்கு கடிதத்தில்…
அறிவிக்கை எண் 02-2022 ஐ ரத்து செய்ய வேண்டும். தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டாம். மீண்டும் முந்தைய முறைமையின் அடிப்படையில் தேர்வை நடத்த வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று கோரியுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.