சபரிமலை ஆன்லைன் முன்பதிவை தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருவனந்தபுரம்: சபரிமலை ஆன்லைன் முன்பதிவை அரசு சார்பில் காவல்துறை மேற்கொண்டு வந்து நிலையில், அதை கோவிலை நிர்வகிக்கும்  தேவசம்போர்டிடம் ஒப்படைக்க கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அதை அவ்வப்போது மாநில அரசு தலையிட்டு, நடைமுறைகளை மாற்ற முயற்சித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா காலக்கட்டத்தில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு போன்றவற்றை அறிவித்து, மாநில அரசு நிர்வகித்து வந்தது. இதற்கு தேவசம் போர்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு  கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அனில்  நரேந்திரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. அப்போது மாநில அரசு சார்பல்,  சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுமார் 10 வருடங்களுக்கு முன்புவரை சுவாமியை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர். இதை தவிர்ப்பதற்காக ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டது என்றும்,  கேரள போலீசின் கட்டுப்பாட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,  இதன் மூலம்  பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் எளிதில் சபரிமலையில் தரிசனம் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  சபரிமலை ஆன்லைன் முன்பதிவை கையாளும் பொறுப்பை 3 மாதத்திற்குள் தேவசம் போர்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேரள போலீசுக்கு உத்தரவிட்டது.  அதேசமயம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் முன்பதிவில் உள்ள விவரங்களை போலீசுக்கு வழங்க வேண்டும் என்றும், பக்தர்களின் தனிப்பட்ட விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் தேவசம் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.