டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு வரும் மே 21-ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வின்போது காலை 8.30 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டும்.
 9 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேரும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேரும்  விண்ணப்பித்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

மேலும், தேர்வு நேரத்தில் சோதனை செய்வதற்காக 6,400 குழுக்கள், 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 10 பேர் என்ற அளவில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்..
நூல் விலை உயர்வு- மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.