தூக்க ஏற்க தயார்… காந்திய கொள்கையை பின்பற்றுபவன் நான்: யாசின் மாலிக்!

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான
யாசின் மாலிக்
பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீரின் அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், காஷ்மீரில் வன்முறை-தீவிரவாதத்தை ஊக்குவித்தது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு டெல்லி
தேசிய புலனாய்வு முகமை
(என்.ஐ.ஏ.,) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்தது. “தீவிரவாத இயங்கங்களுக்கு நிதி வழங்கியதாக யாசின் மாலிக் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.” என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், யாசின் மாலிக்கின் சொத்து விவரம் குறித்து அவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் தண்டனை விவரம் மே 25ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவித்தது. அதன்படி, அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு முகமை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், நான் காந்திய கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார். தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். எதற்கும் பிச்சை எடுக்க மாட்டேன். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றமே இதில் முடிவெடுக்கட்டும் என்றும் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

“28 வருடங்களாக நான் ஏதேனும் தீவிரவாதச் செயல் அல்லது வன்முறையில் ஈடுபட்டிருந்தால், இந்திய உளவுத்துறை அதனை நிரூபித்தால், நாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். தூக்கு தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் என்று யாசின் மாலிக் கூறியதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.