ஐதராபாத்தில் மைனர் பெண்ணை கடத்தி காரிலேயே கூட்டு பலாத்காரம்: வாரியத் தலைவர் மகன் உள்பட 3 பேர் கைது

திருமலை: ஐதராபாத்தில் பப்பில் மது விருந்தில் பங்கேற்ற மைனர் பெண் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாரியத்தலைவர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபான ‘பப்’ உள்ளது. இங்கு கடந்த 28ம் தேதி 17 வயது மைனர் பெண், நண்பர் ஒருவரின் விருந்துக்கு சென்றுள்ளார். விருந்து முடிந்து வெளியே வந்தபோது விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், மைனர் பெண்ணை தாங்கள் வந்த சொகுசு காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். பின்னர் சுமார் 2 மணிநேரம் ஐதராபாத் நகரை சுற்றி வந்தபடி அந்த பெண்ணை காரிலேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை ‘பப்’ பின் எதிரே கொண்டுவந்து இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்த மற்றொரு காரையும் எடுத்துக்கொண்டு 2 காரில் தப்பிச்சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட மைனர் பெண் தனது தோழிக்கு போன் செய்து அவர் உதவியுடன் வீட்டிற்கு சென்றார். அங்கு நடந்த விவரங்களை கூறினார். பின்னர் மைனர் பெண்ணின் தந்தை ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மைனர்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. பின்னர் மைனர் பெண் அளித்த தகவல்படி சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சிறுவர்கள் உட்பட 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் சிறுபான்மை நலவாரிய தலைவரின் மகன் உட்பட சிலர் என தெரியவந்துள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் முகமது அலியின் பேரன் எனவும் கூறப்பட்டது. இதையடுத்து தெலங்கானா அரசு, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து இதில் தொடர்புடையதாக கூறப்பட்ட சிறுபான்மை நலவாரிய தலைவர் மகன் மற்றும் அவரது நண்பர் மகன் ஆகிய 17 மற்றும் 16 வயது சிறுவர்களையும் மற்றும் காதர்கான் என்பவர் என 3 பேரை  போலீசார் கைது செய்தனர். மேலும் 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஐதராபாத் காவல்துணை ஆணையர் ஜோயல்டேவிஸ் கூறியதாவது: காரில் நடந்த கூட்டு பலாத்கார விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் பேரனுக்கு தொடர்பு இல்லை. இந்த வழக்கில் மொத்தம் 5 பேருக்கு தொடர்பு உள்ளதாக அடையாளம் கண்டுள்ளோம். இதில் 3 பேர் மைனர்கள். 2 சிறுவர்களும், பப்புக்கு மைனர் பெண்ணை அழைத்து வந்த காதர்கான் என்பவரையும் கைது செய்துள்ளோம். கைதான சிறுவர்களில் வக்பு வாரிய தலைவரின் மகனும் உள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டு பேரை தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.