பல்கலைக்கழக வேந்தராகிறார் முதல்வர்… மாநில ஆளுநருக்கு செக்!

அனைத்து மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்களே பதவி வகித்து வருகின்றனர். இதன்படி மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி வகித்து வருகிறார்.

இந்த பதவியை அவரிடம் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜி்க்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்திற்கு மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து மேற்கு வங்க மாநில முதல்வரை பல்கலைக்கழங்களின் வேந்தர் ஆக்க வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு சட்டமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

தமி்ழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் ஸ்டாலினை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக அல்லாத மாநில கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆளுநர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு ஏதாவதொரு விதத்தில் தொடர்ந்து நெருக்கடி அளித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

ஆளுநர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவி, ஆளுநர்களிடமிருந்து அந்தந்த மாநில முதல்வர்களுக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.